×

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.6.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் ரூ.6.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த இந்த சிறப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு 21 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 250 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதித்த மற்றும் இரு கால்களும் பாதித்த 5 நபர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கினார். பின்னர் ஈமச்சடங்கு நிதி, திறன்பேசி ஆகியவை வழங்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறன் கொண்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இரு கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை வழங்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2ஆயிரத்தில் இருந்து ரூ.3ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வித் தொகையை தமிழக அரசு இரட்டிப்பாக ரூ.2 ஆயிரமாக வழங்கி வருகிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,550 வரை மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

இதனை உயர்த்தி தற்போது ரூ.3ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் உதவித் தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்தது. தற்போது அதனை தமிழக அரசு ரூ.8 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இளங்கலை பட்டம் படிப்பவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருகிறது. அதேபோல் ெதாழிற்கல்வி பயிலுபவர்கள் மற்றும் முதுகலை பயிலுபவர்களுக்கு ரூ.7ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இதனை உயர்த்தி ரூ.14 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் அல்லது மாற்றுத்திறன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும், சுய தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பல்வேறு கடன் வழங்கப்பட்டு வருகிறது. செல்போன் உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு துறைகள் மற்றும் வங்கிகளில் ரூ.25 ஆயிரம் முதல் பல லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்த கடனை பெற்று மாற்றுத்திறன் கொண்டவர்கள் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். மேலும், மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்டவர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் குறைகள் இருந்தால், மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.முகாமில், ஊட்டி கோட்டாட்சியர் துரைசாமி, தாசில்தார் சரவணகுமார், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெகதீசன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சாகுல் அமீது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரூ.6.31 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Special Camp for Disabilities ,Oothi ,Special Camp ,Dinakaran ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...